Pages

Thursday 15 September 2016

தென்தமிழ்நாட்டின் ஒரே கட்டுமானப் பள்ளியாகத் திகழும் அனுமந்தக்குடி சமணப் பள்ளி - வே.இராஜகுரு



அனுமந்தக்குடி சமணப் பள்ளி
    சங்ககாலம் முதல் தமிழகத்தில் சமணர்கள் வாழ்ந்ததாக இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. பல இலக்கண இலக்கியங்கள் அவர்களால் படைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சென்னை, தஞ்சாவூர் போன்ற தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில்  இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் சமணர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் வழிபாட்டுக்கென பழமையான சமணப்பள்ளிகளையோ அல்லது புதியதாகக் கட்டப்பட்டவற்றையோ பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தென் தமிழகத்தில் சமணம் கொடிகட்டிப் பறந்திருந்தாலும், இன்று அவர்கள் விட்டுச்சென்ற சமணப்பள்ளிகளைத் தவிர அம்மதத்தைப் பின்பற்றுவோர்  இங்கு இல்லை. இதிலும் மலைக்குகைகளில் அமைக்கப்பட்டவற்றைத் தவிர கற்கள் கொண்டு கட்டப்பட்ட பள்ளிகள் பெரும்பாலும் இடிக்கப்பட்டுவிட்டன அல்லது மாற்றப்பட்டுள்ளன.

அனுமந்தக்குடி கட்டுமானப்பள்ளி 

சிவகங்கை மாவட்டத்தில் மகிபாலன்பட்டி, இளையான்குடி, பிரான்மலை, குன்றக்குடி, திருக்களாக்குடி, பூலாங்குறிச்சி, திருமலை, அனுமந்தக்குடி ஆகிய இடங்களில்  சமணர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன. மதுரை, மேலூர், திருமலை, குன்றக்குடி, அனுமந்தக்குடி, இடையமடம் வழியாக தொண்டிக்கு ஒரு பெருவழி இருந்துள்ளது. இப்பெருவழிகளைப் பயன்படுத்திய வணிகர்கள் தங்கள் வழிபாட்டுக்கென கட்டியுள்ள சமணப்பள்ளிகள் அவர்கள்  இங்கு வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. இப்பகுதிகளில் ஓடும் விருசுழி மற்றும் பாம்பாற்றின் கரைகளில் சமணப்பள்ளிகள் பல இருந்துள்ளன.
பள்ளியின் முகப்புத் தோற்றம்
 எனினும் தென் தமிழகத்திலேயே அனுமந்தக்குடியில் மட்டுமே இன்றும் வழிபாட்டில் உள்ள சமணப்பள்ளி உள்ளது. இது முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. தென் தமிழகத்தில் உள்ள ஒரே கட்டுமான பள்ளி இது மட்டுமே மற்றவை குகைப் பள்ளிகள் ஆகும். கர்நாடகத்தோடு தொடர்புடைய சில தமிழ் சமணக் குடும்பங்கள் இன்றும் இங்கு உள்ளன.

பள்ளியின் அமைப்பு
பார்சுவநாதரின் புதிய சிலை

  
பார்சுவநாதரின் பழைய சிலை
தேவகோட்டையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் சுந்தரபாண்டியன்பட்டினம் செல்லும் சாலையில் விருசுழி ஆற்றின் கரையில் உள்ளது அனுமந்தக்குடி. மூலஸ்தானம், முன்மண்டபம், மகாசாத்தையா ஆலயம், பலிபீடம் என்ற அமைப்பில் இப்பள்ளி அமைந்துள்ளது. இது சமணர்களின் 23 ஆம் தீர்த்தங்கரரான  பார்சுவநாதருக்காகக் கட்டப்பட்டுள்ளது. சேதமடைந்த நிலையில் இருந்த பழைய பார்சுவநாதர் சிலை அகற்றப்பட்டு புதிய சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு மூலஸ்தானத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய சிலை முன்மண்டப வலது பக்கம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு தர்மதேவி இயக்கி, மகாசாத்தையா, காளி, கருப்பன், மாரியம்மன், கணபதி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. 
மகாசாத்தையா
 மூலஸ்தானத்தின் முன்புறம் சிறிய அளவில் உள்ளது மகாசத்தையா ஆலயம். இது மிகக் குறுகிய வாசல் கொண்டுள்ளது. மகாசத்தையா உக்கிர கோலத்தில் கையில் சூலம் ஏந்திய நிலையில் இங்கு காட்சியளிக்கிறார். இந்த ஆலய வாசலின் இடது பக்கம் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ளது சொக்கவணிகன் என்பவரின் புடைப்புச்சிற்பம். இவர் தொண்டியின் அரசராக இருந்தவர் எனக் கூறுகிறார்கள். இவர் தங்க வணிகராக இருந்திருக்கலாம். இவர் இக்கோயில் கட்ட நிலத்தை, பசுமாட்டின் ஒரு அடி மிதிக்கு 5 தங்கநாணயம் வீதம் விலை கொடுத்து வாங்கியதால் அடிமிதிகுடி என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டு அனுமந்தக்குடி என மாறியுள்ளதாகத் தெரிகிறது. 
சொக்கவணிகன்
 கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இப்பள்ளி, கி.பி.1881 ஆம் ஆண்டு விருசுழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெருமளவு சேதமடைந்தது. வெள்ளம் வடிந்த பின், ஆற்றின் தென்பகுதியில் இருந்த இப்பள்ளி, அதிலிருந்த கற்களைக் கொண்டு கி.பி.1885 இல் இப்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டு செய்திகள்  

மதுரை நாயக்க மன்னரான விசுவநாத நாயக்கர் கி.பி.1535 ஆண்டில் இப்பள்ளிக்கு வழங்கிய கல்வெட்டில், இவ்வூரின் பெயர் முத்தூற்றுக் கூற்றத்து குருவடிமிடி எனும் ஜீனேந்திரமங்கலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில்,  பார்சுவநாதர் மழவநாதர் சுவாமி என குறிக்கப்பட்டுள்ளார்.
கி.பி.1783 இல் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி காலத்தில் மழவநாத சுவாமி ஆலயத்துக்கு வடக்கு செய்யானேந்தல் என்ற ஊர் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதை ஓலைப் பட்டயத்தில் வழங்கியுள்ள அவர் இங்குள்ள தர்மதேவி இயக்கியை மரகதவல்லியம்மன் என்றும், பிரம்மதேவரை மகாசாத்தா என்றும் அதில் குறித்துள்ளார். இது மன்னர் உத்தரவுப்படி மன்னரின் பிரதானி முத்து இருளப்பப் பிள்ளை என்பவரால் வழங்கப்பட்டுள்ளது.
தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி மூல நூலின் ஓலைச் சுவடி  இங்கிருந்துதான் பெறப்பட்டு அச்சிடப்பட்டது. 
சைவ, வைணவ மதங்களைப் போற்றி ஆதரித்த மதுரை நாயக்க மன்னர்களும், சேதுபதி மன்னர்களும் இங்குள்ள சமணப்பள்ளிக்கு கொடை வழங்கி உள்ளது அவர்களின் மதச் சகிப்புத்தன்மைக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது.

Friday 2 September 2016

தாதனேந்தல் வரலாற்றுச் சிறப்புகளும் கிராமத்துப் பாடல்களும் - கு.சினேகா



(இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 23.08.2016 அன்று ‘நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர் ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை)

இக்கட்டுரை ஆசிரியரைப் பற்றி............



இக்கட்டுரை ஆசிரியரான கு.சினேகா, இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி.  இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 23.08.2016 அன்று ‘நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர் ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை இது. வாய்மொழித் தகவல்கள், களஆய்வு, நேர்காணல், நாணயங்கள், ஊர் பெயராய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு மாதங்களாக ஆய்வு செய்து இக்கட்டுரையை எழுதியுள்ளார். இவ்வூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன், உலகம்மாள், வள்ளி போன்றோரிடம் நேரில் விசாரித்து பல தகவல்களை திரட்டியுள்ளார். இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா, இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற  பொறுப்பாசிரியர் திரு வே.இராஜகுரு ஆகியோரின் வழிகாட்டுதல்கள் இவரது ஆய்வுக்குத் துணை புரிந்துள்ளன. 


அறிமுகம் 

      இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது தாதனேந்தல் என்ற ஊர். இவ்வூரில் பூரணி, பொற்கலை இல்லாமல் தனியாக அருள்தரும் பழமையான ஐயனார் கோவில், மருத்துவ சிறப்புமிக்க உகாய் மரம் ஆகியவை காணப்படுகின்றன. பனையும், அரசும் இணைந்து காணப்படும் பல மரங்கள், செம்மண் நிறைந்த மேட்டுப்பகுதி ஆகியவை இவ்வூரின் சிறப்புகள்.   


ஊர் பெயர்க்காரணம்

      தாதனேந்தல் என்னும் இவ்வூரில் பல வருடத்திற்கு முன் தாதர்கள், அதாவது அழகர்கள் என்பவர்கள் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் தமது தேவைக்காக அக்காலத்தில் ஒரு ஊரணி தோண்டினார்கள் அந்த ஊரணியின் பெயர் காலாங்கரை. அவர்கள் வழிபடுவதற்காக இரு கோவில்கள் அமைத்தார்கள். அக்கோவிலின் பெயர்கள் பெருமாள் கோவில், ஐயனார் கோவில். இவர்கள் இந்த ஊரில் வாழ்ந்ததற்கான அடையாளமாக இவ்விரு கோவில்களும், காலாங்கரையும் உள்ளன. காலாங்கரையை இவர்கள் ஏந்தல் என்றும் அழைத்தனர். ஏந்தல் என்றால் நீர்நிலை. அதனால் தான்  இவ்வூர் தாதரேந்தல் என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் தாதனேந்தலாக மாறிவிட்டது. பிறகு மேலச்செல்வனூரில் இருந்து வந்த மக்கள் மோட்டுப்பனை என்னும் இடத்தில் வாழ்ந்தனர். தாதர்களில் ஒருவர் இதைப் பார்த்துவிட்டு அனைவரையும் இப்போது ஊர் உள்ள இடத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் தாதர்கள் இவ்வூரிலிருந்து வேறு ஊருக்குக் குடி பெயர்ந்து சென்றுவிட்டனர்.

மோட்டுப்பனை 

இந்த இடம் இந்தப் பகுதியிலேயே மிக உயரமானதாக இருக்கிறது. இது  ஆதிமனிதர்கள் வாழ்ந்த பகுதியாக இருக்கலாம். அவர்கள் மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்பகுதியில் வாழ்ந்து இருந்திருப்பார்கள். மேலும் புயல், வெள்ளத்தில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும்  இவ்விடத்திற்குச் சென்று இருப்பார்கள் இது அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்திருக்கும். மேடான பனைகள் நிறைந்த பகுதி என்பதால் இவ்விடம் மோட்டுபனை என அழைக்கப்பட்டிருக்கலாம்.  
 

உகாய் மரம்
மிஸ்வாக் என்ற பெயரில் வரும் பற்பசை இம்மரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதன் பெயர் மிஸ்வாக். இது சிறுநீரக கல்லுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் குச்சிகள் பல் துலக்கப் பயன்படுகின்றன.
இதன் விதை மிளகு போல் காரமுடையது. சங்க இலக்கியமான நற்றிணையின் 66- வது பாடலில் இம்மரம் குறிக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் salvadora persica . இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மரம் இவ்வூர் நொண்டிக் கருப்பணசாமி கோவில் அருகில் காணப்படுகிறது. இம்மரம் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கிறது




சவுக்கு மூங்கில் மரக்காடுகள்

இந்த ஊரில் அக்காலத்தில் சவுக்குமரமும் மூங்கில்மரமும் நிறைய காணப்பட்டன. அவை இப்போது அழிந்துவிட்டன. வறண்டுபோன அந்த இடங்களில் இப்போது  கருவமரங்களும், பனைமரங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

இங்குள்ள கோயில்களும் தெய்வங்களும்

·        லாடய்யா கோவில்,
·        மாடய்யா கோவில்,
·        முனியையா கோவில்,
·        நொண்டிக் கருப்பணசாமி கோவில்.
·        கலியமுத்தம்மன் கோவில்.
·        ஐயனார் கோவில்.
·        காளியம்மன் கோவில்.
·        ராக்கச்சியம்மன் கோவில்.
·        உலகாண்டவள் கோவில்.
·        செல்வத்துரை கோவில்.
·        வலம்புரியான் கோவில்.

இங்குள்ள குளங்களின் பெயர்கள் 

·        காலாங்கரை
·        தோப்பூரணி
·        சின்னத்தோப்பூரணி
·        தரவை

காலாங்கரை

        காலாங்கரை  என்பது ஏரிக்கு நீர்கொண்டு வரும் கால்வாய் ஆகும். காலின் (கால்வாயின்) கரை என்பதால் இப்பெயர் பெற்றிருக்கிறது. காலின் (கால்வாயின்) கரையில் அமைந்த ஊருக்கும் காலாங்கரை எனப் பெயர் ஏற்பட்டு இருக்கும். இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் ஒரு காலாங்கரை உள்ளது. தாதர்களால் இது தோண்டப்பட்டிருக்கலாம். இக்கால்வாய் இராமானுசப் பேரேரிக்கு நீர் கொண்டுவரும் கால்வாயாக இருந்திருக்கலாம்.

தோப்பூரணி

தென்னந்தோப்பு இருந்த இடத்தில் தோண்டி உள்ளதால் இந்த ஊரணிக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். இதை இப்போதும் இந்த ஊரில் உள்ள மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

சின்னத்தோப்பூரணி

அக்காலத்தில் உத்தரவையில் முளைப்பாரி கொட்டும்போது இந்த ஊரணியில் தான் கரகம் எடுப்பதற்க்கு, தண்ணீர் எடுப்பது வழக்கம்.

தரவை

இவ்விடத்தில் மழை பெய்யும் போது தண்ணீர் வந்து தேங்கி நிற்கும். ஆனால் ஆழமே இருக்காது. அதனால் இது தரவை என்று அழைக்கப்படுகிறது.

பழமையான ஆலமரம் 

இந்த ஊரில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. இது 500 ஆண்டு பழமையான மரம். இந்த ஆலமரத்தின் மேல் ஒரு நீண்ட பனைமரம் வளர்ந்துள்ளது. இந்த மரத்தைப்  பார்த்தால் ஒரு பழமையான கோட்டை போல் இருக்கிறது. நீண்ட விழுதுகளுடன் இம்மரம் காணப்படுகிறது.
  

இராஜராஜசோழன் ஈழக்காசு 

இங்கு இராஜராஜசோழன் கால ஈழக்காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 1000 வருடத்திற்கு மேல் பழமையானது. கி.பி.10 நூற்றாண்டை சேர்ந்த  ஈழக்காசு ஆகும். இங்கே முதுமக்கள் தாழியும், இரும்புத் தாதும் கிடைத்துள்ளன. கி.பி.10 நூற்றாண்டுக்கு பின் பயன்படுத்திய பானை ஓடுகள் இங்கு நிறைய கிடைக்கின்றன.
இக்கிராமத்தில் வழங்கப்படும் பாடல்கள்

கும்மிப்பாட்டு

தானாகண்ணே  தானகண்ணே
முந்தி முந்தி விநாயகராம்
முருகோள் நல்ல சரசுவதி
கந்தனுக்கு முன்பிறந்த
காசி நல்ல கணபதி
ஆவருங்கட்டைய வெட்டுங்கடி – புள்ள
ஆளுக்கொரு கொட்டா கொட்டுங்கடி
ஆடத்தெரியாத மடப்பயலுக்கு
ஆளுக்கொரு துப்பா துப்புங்கடி
பாம்பு இருக்கும் பொந்துக்குள்ள - புள்ள
பயமிருக்கு நெஞ்சுக்குள்ள
தட்டக் காட்டு பயலுக
பொண்ணு கேட்டு வந்தாங்க
மொட்ட மொட்ட குமரிய
வேணாம் முண்ணு சொன்னாங்க.

ஒயில் பாட்டு

தானாகண்ணே  தானாகண்ணே போடு
தன்னாகண்ணே தன்னாகண்ணே
கொட்டுடி கொட்டுடி ராக்காயி - இவ
குனிஞ்சு கொட்டுடி ராக்காயி
குனிஞ்சு கொட்டுனா  குறுக்கு வலிக்கும்
நிமிந்து கொட்டுடி ராக்காயி
தானாகண்ணே தானாகண்ணே - ஒயிலு
தன்னாகண்ணே தன்னாகண்ணே
மோட்டார் போகுது பாருங்கடி
மோட்டார் மோதி போகுது பாருங்கடி
மோட்டார் மேல இருக்குற முனியப்பன் சாமிக்கு
மோதரம் மின்னுரத பாருங்கடி
தானாகண்ணே தானாகண்ணே - ஒயிலு
தன்னாகண்ணே தன்னாகண்ணே
காரு போறத பாருங்கடி
காரு கதறி போறத பாருங்கடி
காருகுள்ள இருக்குற கருப்பண சாமிக்கு
கண்ணாடி மின்னுறத பாருங்கடி - இவ பாருங்கடி
தானாகண்ணே தானாகண்ணே போடு
பாவை படருது பாருங்கடி
பாவை பற்றிப்படருது பாருங்கடி
பாவை பழம் போல நம்மூரு பொண்டுக்கு
பல்லு வரிசைய பாருங்கடி - இவ பாருங்கடி
தானாகண்ணே தானாகண்ணே - ஒயிலு
தன்னாகண்ணே தன்னாகண்ணே
கோவை படருது பாருங்கடி
கோவை கொத்திப் படருது பாருங்கடி
கோவை பழம் போல நம்மூரு பொண்டுக்கு
கொண்டை வரிசைய பாருங்கடி - இவ பாருங்கடி
தானாகண்ணே தானாகண்ணே - ஒயிலு
தன்னாகண்ணே தன்னாகண்ணே.

முடிவுரை

      ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பாக ஏதாவது ஒன்று இருக்கும். அந்தவகையில் உகாய் மரமும் பெரிய ஆலமரமும் இவ்வூரில் காணப்படுவது இயற்கை இவ்வூருக்கு வழங்கிய கொடையாகவே உள்ளது. அதிக அளவிலான பனை மரங்கள் இவ்வூரின் நீர் வளத்தைப் பாதுகாக்க உதவுகிறது. அதேசமயம் இங்கு அதிகளவில் காணப்படும் கருவை மரங்கள் இவ்வூரின் நீர் வளத்தை கேள்விக்குறியாக்கிவிடும். நமது ஊரின் வரலாற்றை நாம் அறிந்துகொள்வதால் நம் ஊரின் சிறப்பு நமக்குத் தெரியவரும். அதை எப்போதும் காக்கவேண்டும் என்ற உணர்வையும் அது நமக்கு ஏற்படுத்தும்.