இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப்
பாதுகாப்பு மையத்தின் தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் காளிமுத்து, கமுதி
ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப் பாண்டியன் ஆகியோர் முதுகுளத்தூர் பகுதி கிராமக் கோயில்கள்
பற்றிய களஆய்வின்போது, மேலக்கன்னிசேரி கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்
பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை விநாயகர் சிலையைக் கொண்டு கோயில் அமைத்து இருப்பதைக் கண்டறிந்தனர். இது
பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,
விநாயகர் வழிபாடு
விநாயகர்
வழிபாடு பரவலாக உலகம் முழுவதும் பல நாடுகளில் காணப்படுகிறது. இந்தோனேஷியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகர் உருவம்
அச்சிடப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர் காலத்தில் விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய
நாடுகளுக்கு பரவியதாகத் தெரிகிறது. மியான்மரில் (பர்மா) விநாயகரை மகாபைனி என்கிறார்கள்.
இங்குள்ள புத்த சமயக் கோவில்களிலும் விநாயகர் சிலைகள் உள்ளன. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா மகாபைனி என்றே
கொண்டாடப்படுகிறது.
பர்மா தொடர்பு
சங்ககாலம் முதல் தமிழர்கள் மியான்மருடன் (பர்மா) வணிகத்தொடர்பு
கொண்டிருந்த போதும், கி.பி.18௦0களில் தான் அதிகளவில் தமிழ்நாட்டில் இருந்து செட்டியார்கள்
மற்றும் ஆங்கிலேயர்களால் கூலி வேலைக்காகவும் வணிகத்துக்காகவும்
தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர், கமுதி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பர்மாவின் ரங்கூன் (தற்போது
யங்கூன்) பகுதிகளில் அதிக அளவில் குடியேறி உள்ளனர்.
குறிப்பாக முதுகுளத்தூர் அருகே மேலக்கன்னிசேரி
என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் 2௦௦ ஆண்டுகளுக்கு முன் மியான்மர் நாட்டில் வணிகம் செய்யச்
சென்றுள்ளனர். பர்மாவில் இப்பகுதி மக்கள் அதிகளவில் இருந்ததால் இரண்டாம் உலகப்
போர் சமயத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆள்சேர்க்க பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் பர்மா சென்றுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பர்மாவில்
இருந்த பலர் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.
இவ்வூரைச்
சேர்ந்தவர்கள் 6௦ ஆண்டுகளுக்கு முன்பு வரை பர்மா சென்று வணிகம் செய்துவிட்டு
குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருவது வழக்கமாக இருந்துள்ளது.
அவ்வாறு இந்திய தேசிய
ராணுவத்தில் இருந்தவர்களும் தங்கள் இறுதி காலத்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி
வந்துள்ளனர். தற்போதும் இவ்வூரைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் மியான்மரில்
வசிக்கிறார்கள். 196௦களில் மியான்மரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டபோது இவ்வூரைச்
சேர்ந்த பலர், இந்தியா திரும்பி கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் குடியேறியுள்ளனர்.
பர்மா விநாயகர்
இங்கிருந்து வணிகம் செய்ய பர்மாவுக்குச்
சென்ற பெருமாள் தேவர் என்பவரின் குடும்பத்தினர் நூறு ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து
திரும்பி வந்தபோது, வெள்ளைப் பளிங்கால் வார்க்கப்பட்ட விநாயகர் சிலையை கப்பலில் கொண்டு
வந்துள்ளனர். இவ்வூரில் கோயில் கட்டி இச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். நூறு
ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் இன்றும் வழிபாடு தொடர்ந்து நடப்பதாக இவ்வூரைச்
சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
சிலை அமைப்பு
மூன்று அடி உயரத்தில்
ஐந்து கரங்களுடன் இடது காலை மடக்கி அமர்ந்த நிலையில் உள்ளார் விநாயகர். அவரின்
இடது பின் கையில் பாசக்கயிறும் வலது பின்
கையில் அங்குசமும் உள்ளன. வலது முன்கையில் ஒடிந்த தந்தமும், இடது முன் கை,
துதிக்கையை பிடித்தவாறும் உள்ளது. பிற்காலச் சோழர்களின் சிற்பக்கலை அமைப்பில்
இச்சிலை அமைந்துள்ளது.
கடல் பயணத் துணையாக விநாயகர்
தமிழர் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் காலத்தே அவர்கள் தமது வழித்துணையாக விநாயகர் உருவத்தை
எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச்சென்ற விநாயகர்
சிலைகளைக் கொண்டே அவர்கள் சென்ற நாடுகளில் கோயில் கட்டியுள்ளனர். தமிழர்களால்
பர்மாவில் கி.பி.1860 இல் கட்டப்பட்ட முதல் கோயில் சித்தி விநாயகர் கோயில் என்பது
குறிப்பிடத்தக்கது.
கடல் பயணத்தின் போது வழித்துணையாக எடுத்து வரப்பட்டதாக இந்த வெள்ளை
விநாயகர் சிலை இருக்கலாம். சொந்த ஊருக்கு பத்திரமாகத் திரும்பியதும் இச்சிலையைக்
கொண்டு கோயில் கட்டியிருப்பதாகத் தெரிகிறது.
நாளிதழ்
செய்திகள்
தி
இந்து
தினமலர்
அறியாத, அரிய செய்தி அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete